கர தரிசனம்

கர தரிசனம்..!!!
காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் செய்ய வேண்டிய எளிய
இறைவழிபாடுகள் உண்டு. சித்த புருஷர்கள் அருள்கின்ற இவ்வெளிய இறை வணக்க முறைகளைப் பின்பற்றினால் நித்ய வாழ்க்கை சாந்தமாக, சீராக அமையும். காரணம், இறையருளன்றி நம் விரலை ஒரு முறை கூட அசைக்க முடியாது என்பதை உணர உணர "எல்லாம் அவன் செயல், அனைத்தும் நம் கர்ம வினைப்படியே நடக்கின்றது, அவன் ஆட்டுவிக்க நாம் ஆடுகின்றோம்" என்ற பேருண்மை புலப்படத்துவங்கும்.
இதற்காகவே நம் தினசரி வாழ்க்கை துவங்கும் ஒவ்வொரு நாள் காலையிலும் படுக்கையில் எழும் போது "பிராப்தப் பிங்களாசனம்" என்ற எளிய ஆசனத்தையும் "சங்கர நாராயண கர தரிசனத்தையும்" சித்த புருஷர்கள் அளித்துள்ளனர். இறை நினைவோடு எழுந்தால் அதுவே உத்தமமானது. திடுக்கிட்டு எழுதல் கூடாது. தானாகவே சாந்தமாகத் துயிலெழுகின்ற தன்மையைப் பெற வேண்டும். இதற்கு சில சயன யோகப் பயிற்சி முறைகள் உண்டு. இதைத் தக்க குருவை நாடி அறிதல் வேண்டும்.
ஸ்ரீகோமதி சங்கர நாராயண தரிசனம்
விடியற்காலையில் எழுவதே சிறந்தது. விழிப்பு நிலையை உணர்ந்தவுடன் கண்களைத் திறவாது இரு கரங்களையும் ஒன்று சேர்த்து, உள்ளங்கைகளைப் பரந்து, விரித்து இரு கண்களால் இரு உள்ளங்கைகளையும் தரிசிக்க வேண்டும். அவ்வாறு தரிசிக்கின்ற போது வலது உள்ளங்கை பகுதியில்: சுக்கிர விரல் (கட்டை விரல்), குருவிரல் (ஆள்காட்டி விரல்), சனி விரல்களின்(நடுவிரல்) கீழ்ப்பகுதிகளில் சிவ லிங்க தரிசனம் தருவதாக பாவித்து, உள்ளங்கையின் கீழ்ப்பகுதியில் ஸ்ரீகோமதி அம்பாள் தரிசனம் தருவதாகவும் பாவித்து துதிக்க வேண்டும். இடது கை பிரபஞ்சத்தைக் குறிக்கிறது. வலது கையில் இருப்பதே இடது கைகளிலுமுள்ளது. எனவே பிரபஞ்சமாயும், பிரபஞ்சத்தினுள்ளும், பிரபஞ்சத்திற்கு அப்பாலுமாய் விளங்கும் ஹரிஹர சக்தி ரூபம், பரப்பிரம்மம், பிறகு கை கூப்பி ஸ்ரீஉத்தாதலகர் வந்தனம் என்று வணங்கி மீண்டும் உள்ளங்கைகளை விரித்து "ஸ்ரீஉத்தாதலகர் மஹரிஷியே போற்றி" அல்லது"ஸ்ரீ உத்தாதலகராய நம:" என்று ஸ்ரீ உத்தாதலகர் மஹரிஷியைப் போற்றி வணங்க வேண்டும். காரணம் என்ன?
ஸ்ரீசேஷ்டா தேவிஅமுதம் பெற தேவர்களும் அசுரர்களும் பார்க்கடலை கடைந்த போது மூத்த தேவி என்ற ஸ்ரீசேஷ்டா தேவி அவதரித்தனள் (நாம் வழக்கில் "மூதேவி" என்று அழைப்போம், இது மிகவும் தவறு). ஸ்ரீசேஷ்டா தேவி அவதரித்த போது எவரும் ஏற்கவில்லை. இதனால் சினமுற்ற மூத்த தேவி சிவனிடம் ஓடுகிறாள். "சிவபெருமானே! பாற்கடலில் பதிந்து கிடந்த என்னை அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடைந்து என்ன எழும்பச் செய்தனர். பெண் குலத்தில் உதித்த என்னை மூத்த தேவி என்பதால் அசுரர்களோ, தேவர்களோ யாரும் ஏற்கவில்லை. நான் நுழைந்தால் அங்கே செல்வம் நிற்காது என்பதால் என்னைக் கண்ட அனைவரும் ஓடுகின்றனர். செல்வமில்லாக் குறை எனதல்லவே? என்னைப் படைத்ததற்குரிய தொழிலைத்தானே நான் செய்ய முடியும். பாற்கடலில் வசித்த என்னை எழுப்பியது அவர்கள் குற்றமல்லவா? என்னை யாரும் ஏற்காவிடில் நான் எங்கு செல்வேன்? தாங்கள் தான் எனக்கு ஒரு வழி காட்ட வேண்டும் என்று வேண்டினாள்.
வேண்டியதை வேண்டியபடி உடன் அருளும் கருணை வெள்ளமல்லவா சிவபெருமான். மூத்த தேவி சாபமிட்டால் அது பலித்து தேவர்களையும் அசுரர்களையும் தாக்கும். எனவே சிவபெருமான், யாரொருவர், மூத்த தேவியை மணக்கிறாரோ அவருக்கு விசேஷமான சக்திகள் உருவாகும், என்று அறிவித்தும் ஒருவரும் முன்வரவில்லை. காரணம் மூத்ததேவி எங்காவது நுழைந்தால் எனில் அங்கு தரித்திரம் தாண்டவமாடும் என்பதால் தான். ஆனால் ஸ்ரீஉத்தாதலகர் என்ற முனிவர் எவ்வித சுயநலமின்றி மணக்க முன் வந்தார். இவர் தான் உலகிற்கு கடுக்கனின் மஹிமையை வெளிப்படுத்தியவர். தியாகசீலங்கொண்ட தவசீலர். எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றியும் விசேஷ சக்திகளைக் கூட எதிர்பாராது தன்னலமின்றி அவர் மூத்த தேவியை (ஸ்ரீசேஷ்டா தேவி) மணந்தார்.
மூத்த தேவியை மணந்தவுடன் வறுமையும், பசியும், தரித்திரமும் அவர் குடிலில் தாண்டவமாடின. அவற்றை உவப்புடன் ஏற்று, திறந்த உள்ளத்துடன், மனநிறைவுடன் மூத்த தேவியுடன் நன்கு வாழ்ந்து அவர் தேவ லோகத்தை ஒரு சாபத்திலிருந்து மீட்டார். ஸ்ரீஉத்தாதலகரின் தன்னலமில்லாத் தொண்டை கண்டு சிவபெருமானே மகிழ்ந்து மூத்த தேவி வாக்கின் மூலம் ஸ்ரீஉத்தாதலகருக்கு அனுக்ரஹம் புரிந்தார்.
மூத்ததேவி, "முனி சிருஷ்டரே அனைவரும் என்னை வெறுத்து ஒதுக்க, தாங்கள் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, சுயநலங்கருதாது என்னை மணந்து ஒரு மஹரிஷியின் பத்தினி என்ற ஸ்தானத்திற்கு உயர்த்தி விட்டீர்கள். சிவனருளால், இன்றிலிருந்து யாரொருவர் விடியற்காலை எழுந்த உடன் தன் கரங்களை மலர விரித்து வலது உள்ளங்கைக் கீழ் மேட்டைப் பார்த்து தரிசனம் செய்து "ஸ்ரீஉத்தாதலகராய நம:" என்று தங்கள் திருநாமம் செப்பித் துதிக்கின்றார்களோ அவர்கள் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வர். தங்களை கரம் மூலம் தரிசனம் பெறும் போது தங்களது தன்னலமில்லாத தொண்டும், எதுவரினும் ஏற்போம் என்ற கர்மயோக மனப்பான்மையும் அவர்களிடம் உருப்பெற வேண்டும்" என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தாள்.
எனவே சித்தர்கள் அருள்கின்ற காலை இறை வழிபாட்டில் :
1. ஸ்ரீகோமதி சங்கர நாராயண தரிசனமும்
2. ஸ்ரீஉத்தாதலகர் தியானமும் இடம் பெறுகின்றன.
இவ்வளவு விளக்கமாக எடுத்துரைக்கப் பட்டாலும் இவ்விரண்டையும் நிறைவேற்றிட பத்து வினாடிகள் கூட ஆகாது! என்னே, எளிய வழிபாடு! ஆனால் பெறுகின்ற பலன்களோ அபரிதம்.
பிராப்தப் பிங்களாசனம்விழிப்புணர்ச்சி வந்தவுடன் இடது புறம் ஒருக்களித்து அந்நிலையிலேயே இடது கையைத் தரையில் அல்லது கட்டிலில் ஊன்றி சாய்ந்த நிலையிலேயே எழுந்து உட்கார வேண்டும். இம்முறையினால் வலது புற நாசியில் சூரிய கலையில் சுவாசம் சீராக ஓடி மனத்தினைச் சாந்தப்படுத்தும்.
1. இதனால் இரத்த அழுத்த நோய்கள் தணியும்.
2. என்ன ஓட்டங்கள் குறைந்து சீர்படும்
3. ஆழ்ந்த மூச்சு சுவாசம் ஏற்படும்.
இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இதன் பின் குலதெய்வம், இஷ்ட தெய்வம், பெற்றோர்கள், குலகுரு ஆகியோரை மானசீகமாக நமஸ்கரிக்க வேண்டும். இவ்வெளிய முறைகளையே ப்ராத்த பூஜை (காலை பூஜை) என சித்த புருஷர்கள் அருள்கின்றனர். உள்ளங்கை தரிசனமே நவகிரகங்களின் தரிசனமாக மலர்ந்து நம் நித்திய வாழ்வின் கர்மங்களைப் பகுத்து வகுக்கின்ற ஸ்ரீ நவகிரஹ மூர்த்திகளின் அருளையும் பெற்றுத் தருகிறது. எவ்வாறு?
1. கட்டை விரல்.... சுக்கிரன்
2. ஆள்காட்டி விரல் ..... குரு
3. நடுவிரல்.....சனி
4. மோதிர விரல்.....சூரியன்
5. சுண்டு விரல்.....புதன்
உள்ளங்கை = சந்திர மேடு
மேடுகள் = செவ்வாய் மேடு
ராகுவும் (Moon's Ascending Node) கேதுவும் (Moon's Descending Node), பழங்கால வானியியல் கணிதப்படி சனி, செவ்வாய் கிரகங்களின் பாற்படும்.
இதன் பிறகு பெற்றோர்களை நமஸ்கரித்தல் அல்லது மானசீகமாகவேனும் நமஸ்கரித்தல், குலதெய்வ, இஷ்ட தெய்வ மூர்த்திகளைத் தியானித்தல், குரு தியானம் இவற்றுடன் காலை வழிபாட்டின் முதல் அம்சம் நிறைவு பெறுகிறது