சித்திரா பவுர்ணமி

 சித்திரா பவுர்ணமி

தெரிந்த பெயர்-----தெரியாத விவரம்!

சித்திரகுப்தர்-----சித்திரா பவுர்ணமியும் சித்திர குப்தரும்  .

சித்திரா பௌர்ணமியன்று அனைவரும் குறிப்பாக சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய சிவப்பரம்பொருளின் அம்சம்!

கயிலையில் சிவ பெருமானும், பார்வதியும் அருகருகே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ''தேவி! அவரவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை எழுதி வைக்க ஒருவனை உருவாக்கி வைக்க நேரம் வந்து விட்டது ''என்றார்.
''ஆம்! சுவாமி'' என்றார் பார்வதி
உடனே இருவரும் பிள்ளை வரம் வேண்டி கடும் தவமிருக்கும் தேவேந்திரனுக்கும், இந்திராணிக்கும் காட்சியளித்து ''இந்திரனே! கவலைப்படாதே! உன் எண்ணம் நிறைவேறும். மகிழ்ச்சியுடன் போ'' என்று ஆசி கூறி அவர்களுடன் தெய்வப்பசுவான காமதேனுவை  பசுங்கன்றாக மாற்றி உடன் அனுப்பி வைத்தார்.

தேவி! ஒரு தங்கப்பாகையும், சித்திரக்கோலும் கொண்டு வா! என்றார் சிவன்.
அவற்றை  உடனே அம்பிகை கொண்டு வந்தார் சிவபெருமான் வண்ணங்களை குழைத்து தூரிகைகளால் தன்னைப் போலவே ஒரு உருவத்தை பலகையில் வரைந்தார் அம்பிகை அந்த ஓவியத்தை உயிர்பிக்க கருணை ததும்பும் கண்களால் பார்த்தார். பிறகு ''சுவாமி! நீங்கள் வரைந்த இந்த ஓவியக்குழந்தையை நீங்களே கூப்பிடுங்கள்'' என்றார்.

சிவபெருமான் தன் கைகளை நீட்டி ""மகனே வா'' என உள்ளம் நிறைந்த அன்போடு கூப்பிட்டார். ஓவியக் குழந்தை உயிர்பெற்று எழுந்தது.

உலகத்திற்கே தாயும், தந்தையுமான பார்வதி பரமேஸ்வரனை வணங்கியது.
அக் குழந்தையின் தலையில் தன்கைகளை வைத்து ஆசீர்வாதம் செய்து சித்திரத்தில் இருந்து பிறந்ததால் சித்தரகுப்தன் என எழைக்கிறேன். குழந்தாய் நீ நீடுழி வாழ்வாய் எல்லா ஜீவராசிகளும் அவரவர் செய்யும் எல்லா செயல்களையும் நீ ஒன்று விடாமல் கவனித்து பாவ, புண்ணிய கணக்கு எழுதும் வேலையை செய்து வா''. அவ்வப்போது எங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

பிறகு சித்திர குப்தரை அழைத்தார் சித்தர புத்திரா! இந்திராணி மாளிகை தடாகத்தில் நீ ஒரு பூவாக இரு காமதேனு தண்ணீர் குடிக்கும் போது பூவான உன்னையும் சேர்த்து உண்ணும் அதன் வயிற்றில் இருந்து சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் ஆதி வாரம் பிரம்ம முகூர்த்தம் (திங்கள்) அன்று நீ குழந்தையாக அவதரிப்பாய் .அதனால் இந்திரனின் குழந்தை இல்லா குறையும் தீரும்'' என்றார்.

அதேபோல இந்திராணி பராமரிப்பில் இருந்த காமதேனு  தண்ணீர் குடிப்பதற்காகத் தடாகத்துக்குச் சென்றது குளத்தில் தாமரைப் பூவாக மாறி இருந்த சித்தரகுப்தனை அந்தப் பசு ஆர்வத்துடன் தின்றது.

சிவபெருமான் அருளாசியால் அந்தப் பசுவுக்கு வயிற்றில் ஏடும், எழுத்தாணியும் கொண்டு சித்திரகுப்தன் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் ஆதி வாரம் பிரம்ம முகூர்த்தத்தில்   மகனாய் அவதரித்தார் சித்திரகுப்தன் என்ற பெயர் பெற்றார்.

சிறு பாலகனாக வளர்ந்த அவன் இந்திரன் - இந்திராணியை வணங்கினான் நான் கைலாயம் போகிறேன் அங்கும் இங்கும் இருப்பேன் நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும் என்று வேண்டினான்.

சித்திரகுப்தனின் வார்த்தைகளைக் கேட்டதும் இந்திரத் தம்பதிகளின் கண்கள் கலங்கின. ஆனாலும் உண்மை நிலை அறிந்ததால் சித்திரகுப்தனுக்கு வாழ்த்து சொல்லி விடை கொடுத்தனர்.

சித்திரகுப்தன் கயிலையை அடைந்த பிறகு, அவனை (சித்திரகுப்தனை) எமனது சபையில் இருந்தபடி பாவ புண்ணிய கணக்கு எழுத சொல்லி அனுப்பி வைத்ததாகவும் அது முதல் இந்நாள் வரை அவரவர் செய்யும் பாவ புண்ணிய கணக்கு எழுதிவருவதாலும் கூறப்படுகிறது.

மனிதன் உயிருடன் இருக்கும் போது செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்றவாறு அவனுடைய இறப்புக்குப் பின்பு, அவனுடைய ஆன்மாவானது அதற்கான பலன்களை அடைகிறது. அவன் செய்த நற்செயல்களுக்கு நற்பலன்களையும், தீயசெயல்களுக்குத் தண்டனைகளையும் அந்த ஆன்மாஅடைகிறது.

இந்தப் பூமியில் நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் இறைவன் சிவபெருமான் சித்ர குப்தரைக் கொண்டு கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார். தெரியாமல் செய்த தவறு களை மன்னிக்க வேண்டியும், இனி எந்தத் தவறையும் செய்யப் போவதில்லை என்பதை உறுதியாகக் கொண்டும் சித்திர புத்திரரை வழிபட வேண்டும்.

இப்படி வழிபடுவதால், இறப்புக்குப் பின்பு, ஆன்மாவிற்குத் தீய செயல்களில் இருந்து விடுவிப்பு கிடைப்பதுடன், அந்த ஆன்மா நரகம் செல்லாமல் காப்பாற்றப்பட்டு சொர்க்கத்துக்கு அனுப்பப்படும் என்கிற தொன்ம நம்பிக்கை உள்ளது. மேலும் சித்ரகுப்தரை வணங்குபவர்கள் கேதுவால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும் விடுபடுவார்கள்.

சித்ரா பௌர்ணமியன்று  இறைவனுக்கு படையல் செய்து பூஜித்து, சித்ரகுப்தனை மனதில் எண்ணி, ‘‘நாங்கள் மலையளவு செய்த பாவத்தைக் கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக் கொள்’’ என்று பிரார்த்திப்பது முற்காலத் தமிழர் மரபு.

பாவங்களை அகற்றி புண்ணியங்கள் சேர்ப்போம்!

சித்திரகுப்தருக்குத் தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில்  தனிக்கோயில் அமைந்துள்ளது. நெல்லுக்கார

வீதியில் உள்ள கோயிலில், மனைவி

சித்ரலேகாவுடன் அருள்புரிகிறார்.

இவளைப் பிரபாவதி என்றும், கர்ணிகை என்றும்

சொல்கிறார்கள்.

இக்கோயிலில் மூலவராக அமர்ந்த நிலையிலும், உத்ஸவராக நின்ற

நிலையிலும் சித்ரகுப்தன் அருள்பாலிக்கிறார்.
.
இந்தக் கோயில், கருணீகர் மரபினரால் நிர்வகிக்கப்படுகிறது.

சித்ரா பௌர்ணமிதோறும் இந்திரனே இந்த ஆலயத்தில் வந்து பூஜிப்பதாக

ஐதீகம். இத்திருக் கோயிலில், சித்திரகுப்தர் அவதரித்த தினமாகக் கருதப்படும் சித்திரா பவுர்ணமி தினத்தன்று, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சித்திரா பவுர்ணமியன்று சித்திரகுப்தர் மற்றும் அவரது தேவியான சித்திரலேகாவுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். அக்கோயிலில் உள்ள சித்திர குப்தருக்கு அன்று இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பின்னர் கல்யாண திருக்கோலத்தில் திருவீதியுலாவுடன் நிறைவுபெறும்.