சதுரகிரி மலை

சதுரகிரி மலை !!!

இறைவன் தரிசிப்பதற்கு எளியனாய் தெருமுனைக் கோவிலிலும் அருள்பாலிப்பதுண்டு. சிரமங்கள் பல கடந்துவந்து தரிசனம் செய்யும்படி உயர்ந்த மலைகளில் கோவில்கொண்டு அருள்வதுமுண்டு. அவ்வகையில், எங்கும் நிறைந்துள்ள ஈசன் லிங்க வடிவினனாய் பெருங்கருணை புரியுமிடம் சதுரகிரி.

சுயம்புவாய் வெளிப்பட்ட சுந்தரர்

முன்பொரு காலத்தில் நிகழ்ந்தது இந்த சம்பவம். ஆநிரை மேய்ப்பவர்கள் சதுரகிரி மலைக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிவருவது வழக்கம். அங்கு செழுமையாக வளர்ந்திருக்கும் புற்களை வயிறார உண்ணும் பசுக்கள் படிப்படியாய் பால் கறக்கும். இவ்வாறு மேய்ச்சல் முடிந்து வீடு திரும்பிய காராம் பசுக்களில் ஒன்று சற்றும் பால் கறக்கவில்லை. இப்படியே சில தினங்கள் தொடர, பசுவின் சொந்தக்காரருக்கு சந்தேகம் வந்தது. மாடு மேய்ப்பவனை அழைத்து கடிந்துகொண்டார். மேய்ப்பனுக்கும் வருத்தம். தன் பக்கம் தவறில்லாதபோது பேச்சுக் கேட்கும்படியாயிற்றே என்ற கோபம். மறுநாள் காலை முதல் அந்தப் பசுவைக் கண்காணித்தபடியே இருந்தான். நண்பகல் வேளையில் மற்ற பசுக்களிடமிருந்து பிரிந்த அந்தக் காராம்பசு தனியே சென்றது. ஓரிடத்திலிருந்த கல்லின்மீது பாலைப் பொழியத் தொடங்கியது.

இதைக் கண்டு கோபம் கொண்ட பசு மேய்ப்பவன், ஓடிவந்து அதனை அடிக்க கம்பை ஓங்கினான். எதிர்பாராமல் மேய்ப்பவனைக் கண்ட பசு அங்கிருந்து ஓட ஆரம்பித்தது. பசு விலகியதால் அவனது பிரம்பு, பால் பொழியப்பட்ட கல்லை நோக்கி வந்தது. திடீரென அந்தக் கல் ஒரு பக்கம் சாய்ந்து விலகியது. அப்போதுதான் மேய்ப்பவன் அது வெறும் கல்லல்ல என்பதையும்; சுயம்புவாகத் தோன்றிய லிங்கம் என்பதையும் அறிந்து திகைத்து நின்றான். சுந்தரமகாலிங்கர் தன்னை அடிக்கவந்த அந்த மேய்ப்பனுக்கு காட்சிதந்து மறைந்தார். இந்த சம்பவம் மூலம் அந்த மூர்த்தியின் புகழ் சுற்று வட்டாரங்களில் பரவத் தொடங்கியது. அன்று சாய்ந்த அதே கோலத்திலேயே இன்றும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார் சதுரகிரி சுந்தரமகாலிங்கர்.

சதுரகிரியை சித்தர்கள் மலையென்றே கூறலாம். இங்குள்ள மூலிகைகளும், தீர்த்தங்களும் சித்தர்கள் பிரார்த்தனையின் பலனாக வந்தவை என்றொரு ஐதீகம் நிலவுகிறது.

ராம- இராவண யுத்தத்தின்போது, இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தினால் லட்சுமணன் மூர்ச்சையுற்று சாய, அதைத் தெளிவிக்க அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு வான்வழியே பறந்து வந்தான். சதுரகிரி பகுதியை அவன் கடக்கும்போது, இம்மலையிலிருந்த சித்தர்கள் சஞ்சீவி பர்வதத்தின் ஒரு பகுதி இங்கு விழவேண்டும் என்று பிரார்த்தித்தனர். அவ்வாறே சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இங்கு விழுந்தது. அதன்காரணமாக இங்குள்ள மூலிகைகளும் தீர்த்தங்களும் கடும்நோயையும் தீர்க்கும் அற்புத சக்தி கொண்டு திகழ்வதாகக் கூறுகின்றனர்.

சதுரகிரியைச் சூழ்ந்து, அதன் துணை மலைகள் என்று சொல்லப்படும் பிரம்மகிரி, சித்தகிரி, ஏமகிரி, உதயகிரி, கயிலாயகிரி, சந்திரகிரி, விஷ்ணுகிரி, கும்பகிரி, மகேந்திரகிரி, சஞ்சீவிகிரி, இந்திரகிரி, சூரியகிரி, குபேரகிரி, சிவகிரி, சத்தகிரி பழனி, மேருகிரி ஆகிய பதினாறு மலைகள் உள்ளன. இவற்றுக்கு நடுவில் அமர்ந்து சுந்தரமகாலிங்கர் அருள் பாலிக்கிறார்.

சதுரகிரி மலைக்குச் செல்ல மூன்று பாதைகள் உள்ளன. முதல் பாதை உசிலம் பட்டி, பேரையூர், சாப்டூர் வழியாக வாழைத் தோப்பு வரை செல்கிறது. இங்கிருந்து மலைப் பாதையில் ஐந்து கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

இரண்டாவது பாதை ஆண்டிப்பட்டி, தேனி, வருசநாடு, கருப்பசாமி கோவில் வழியாக சதுரகிரி மலையடிவாரத்தைச் சென்றடையும். இங்கிருந்து பத்து கிலோ மீட்டர் நடந்துசென்று சுந்தரமகாலிங்கரை தரிசிக்கலாம்.

மூன்றாவது பாதை டி. கல்லுப்பட்டி, ராஜபாளையம், கிருஷ்ணன்கோவில் வழியாக தாணிப்பாறையை அடைந்து, அங்கிருந்து ஏழு கிலோமீட்டர் நடந்துசென்று மகாலிங்கர் சந்நிதியை அடையலாம்.

சுந்தர மகாலிங்கரை தரிசிக்கச் செல்லும் வழியிலேயே பல்வேறு ஆலயங்களும், சித்தர் வனங்களும் காணப்படுகின்றன. அவற்றுள் தாணிப்பாறை விநாயகர் கோவில், சுந்தர மூர்த்தி சுவாமி கோவில், சந்தன மகாலிங்க சுவாமி கோவில், அகத்தியர் வனம்,

இடைக்காடர் வனம், பெரிய மகாலிங்க சுவாமி கோவில், பெரிய கணபதி சுவாமி கோவில், ஊஞ்சல் கருப்பன் சுவாமி கோவில், சப்த கன்னிமார் கோவில் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இவ்வாலயத்தை பரம்பரையாக பராமரித்து வருபவர்கள் பரதேசி என்னும் அடைமொழியைக் கொண்ட குடும்பத்தினர்.

இவர்கள் சித்தர்களுடனான அறிமுகம் மூலம், சித்த மருத்துவத்தைக் கற்று மலையடிவாரத்திலுள்ள மக்களின் பிணிகளைத் தீர்ப்பதிலும் அக்கறைகாட்டி வந்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இக்குடும்பத்தினரின் வன பராமரிப்பைப் பாராட்டும் விதமாகவும், அருள்மிகு சுந்தர மகாலிங்கரின் திருப்பணி, பாதுகாப்பு கைங்கர்யங்களுக்காகவும் செப்புப் பட்டா ஓலையாக 63 ஏக்கர் நிலம் ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். இன்றும் அந்தக் குடும்பத்தினரின் சேவை தொடர்கிறது.

பக்தர்கள் கவனத்துக்கு

காலை 6.00 மணியிலிருந்து நண்பகல் 2.00 மணிக்குள்ளாக மலையேறத் தொடங்குவது நல்லது. ஆரோக்கியமானவர்கள் மூன்று மணி நேரத்திலும், வயதானவர்கள் நான்கு மணி நேரத்திலும் ஆலயம் சென்றடையலாம். நடைபயணத்தின்போது தேவையான உணவை கையோடு எடுத்துச்செல்வது நல்லது. வழியில் ஆங்காங்கே புனித தீர்த்தங்கள் கிடைக்கும்.

சதுரகிரி மலைக்குள் சுற்றுச்சூழல் ரீதியாகவும் அங்கு வசிக்கும் உயிரினங்களின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் ஊற்று, சுனை போன்றவற்றை பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்துக்கொள்ள நேரிடலாம். ஒருவேளை அதுபோன்ற பொருட்களை எடுத்துச்செல்ல நேரிட்டாலும், அவற்றையும் இதர காகிதப் பொருட்கள், அட்டைகள் போன்றவற்றையும் மலையடி வாரத்தில் கொண்டு வந்து குப்பைத் தொட்டி யில் போடவேண்டும்.

சதுரகிரி மலையிலுள்ள தீர்த்தங்கள் மற்றும் சுனை நீரை பக்தர்கள் மூலிகைத் தீர்த்தமாக வும், இறைவனது பிரசாதமாகவும் பயன்படுத்துவதால், நீர்நிலைகளில் குளிப்பவர்கள் சோப்பு, ஷாம்பு, சிகைக்காய், எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது.

அவசர அவசரமாக வந்து திரும்புவதைத் தவிர்த்து, அமைதியும் பக்தியும் நிறைந்த மனதுடன் செல்லவேண்டும். சுந்தர மகாலிங்கரை தரிசித்து, ஓர் இரவு மலைப்பகுதியிலுள்ள மடங்களில் தங்கி இறைவனை தியானித்துச் செல்ல வேண்டும். தன்னை ஆழ்ந்த பக்தியுடன் வணங்கும் பக்தர்களின் பிறவித்தளைகளை அறுக்கவல்லவர் மகாலிங்கர் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

இந்த மலையில் சித்தர்களும் ரிஷிகளும் சூட்சுமமாக உலவுகின்றனர். இங்கு நிறைய நாய்களுண்டு. அந்த நாய்களின் வடிவில்கூட அவர்கள் நமக்குத் துணையாக வருவார்கள். வழிதவறியவர்கள் பலர் நாய்களின் வழிகாட்ட லால் சரியான இடத்தையடைந்த சம்பவங்கள் பலவுள்ளன.

இங்கே அன்னதானக் குழுவினரால் பல இடங்களில் மூன்று வேளை அன்னதானம் சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது.

ஆடி அமாவாசைத் திருவிழா, புரட்டாசி நவராத்திரி கொலு பூஜை முளைப்பாரி, அம்பு எய்தல் திருவிழா, தை அமாவாசைத் திருவிழா, ஆவணி அமாவாசைத் திருவிழா, மார்கழி முதல் தின புஷ்ப அலங்கார விழா, மாசி மகாசிவராத்திரி விழா, சித்திரை அமாவாசை பதினெண் சித்தர்கள் அலங்கார பூஜை, மாத அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷ தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடை பெறும். கடந்த ஆடி அமாவாசையன்று பல லட்சம் பக்தர்கள் இங்குவந்து வழிபட்டனர்.

சித்தர்களின் ஆசிர்வாதத்தையும் சிவனின் அருளையும் வேண்டுவோர் வாழ்வில் ஒருமுறையாவது சதுரகிரி யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.