எதைக் கொண்டு வீட்டை நிரப்பலாம்?

எதைக் கொண்டு வீட்டை நிரப்பலாம்?

ஓர் ஊரில் ஒரு வயதான ராஜா இருந்தார். அந்த ராஜாவுக்கு மூன்று பிள்ளைகள்.
அவருக்குப் பிறகு ஒரு இளவரசன் பட்டத்திற்கு வர வேண்டும்.

மூன்று பேரும் ஒன்றாகவே பிறந்தார்கள். அதனால் மூன்று பேருக்கும் ஒரே வயது. அதனால் யாருக்கு அரச பதவி கொடுப்பது என்ற பிரச்னை வந்து விட்டது. குதிரையேற்றம், வில்வித்தை போன்றவற்றிலும் மூவருக்கும் ஒரேமாதிரியான திறமை.

இந்த மூவரில் யார் சிறந்தவன் என்று கண்டு பிடிக்க வேண்டும்? எப்படி கண்டுபிடிப்பது?

ராஜா யோசனை செய்தார். அவரால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. அதனால் காட்டுக்குப் போனார். அங்கே ஒரு குரு இருந்தார். அவரிடம் யோசனை கேட்டார்.

குருவின் யோசனைப்படி மூன்று பிள்ளைகளையும் கூப்பிட்டு அவர்களிடம் சம அளவு பணத்தைக் கொடுத்தார்.

தனித்தனி மாளிகைகளில் குடியிருந்த அவர்களிடம், இதோ பாருங்கள், உங்கள் மூன்று பேருக்கும் ஒரே அளவு பணம்தான் கொடுத்திருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், இதைப் பயன்படுத்தி உங்கள் மாளிகைகளை எதைக் கொண்டாவது நிரப்ப வேண்டும். உங்களுக்கு ஏழு நாள் அவகாசம் தருகிறேன். பிறகு வந்து பார்ப்பேன்.

மாளிகை முழுவதும் யார் நன்றாக நிரப்பியிருக்கிறீர்களோ, அந்தப் பிள்ளைதான் எனக்குப் பின்னால் அரசனாவான்” என்றார்.

மூவரும் யோசனை செய்ய ஆரம்பித்தனர். கொடுத்திருக்கிற பணமோ மிகவும் குறைவு. மாளிகையோ பெரியது. எதை வைத்து நிரப்புவது?

முதல் இளவரசன் நேராகக் குப்பை அள்ளும் இடத்திற்குப் போனான்.
‘இனிமேல் ஊருக்கு வெளியே கொட்டுகிற குப்பையை என் மாளிகைக்குக் கொண்டு வந்து கொட்ட வேண்டும்’ என்று உத்தர விட்டான்.
இவ்வளவு குறைவான பணத்தைக் கொண்டு மாளிகையை நிரப்ப வேண்டுமென்றால், அதற்கு இதுதான் சிறந்த வழி என்று முடிவு செய்துவிட்டான் அவன்.

இரண்டாவது இளவரசன், என்ன செய்வது என்று சிலரிடம் யோசனை கேட்டான்.நீயும் உன் சகோதரன் மாதிரி ஏதாவது செய். நம் ஊரில் புல்தான் மிகவும் மலிவு. கட்டுக்கட்டாகக் கொண்டு வந்து போடச் சொல்” என்று ஒருவர் யோசனை சொன்னார்.
அவரது யோசனைப்படி மாளிகை பாதியளவு நிரம்பியதும் பணம் தீர்ந்துவிட்டது!
இதற்குள் ஏழுநாள் முடிந்துவிட்டது.

ராஜாவும் குருவும் ஒவ்வொரு மாளிகையாகப் பார்த்துக்கொண்டே வந்தார்கள்.
முதல் மாளிகையை நெருங்கவே முடியவில்லை. அவ்வளவு துர்நாற்றம்.

இரண்டாவது மாளிகையில் அழுகிப்போன புல். அதுவும் பாதியளவுதான் நிரம்பியிருந்தது.

மூன்றாவது மாளிகைக்குப் போனார்கள். அங்கே போய்ப் பார்த்தால் உள்ளே எதுவுமே இல்லை. ஏற்கனவே அங்கு இருந்த பொருள்களையும் எடுத்து அப்புறப்படுத்தி இருந்தார்கள். மாளிகை முழுவதும் காலி.

மகனே, நீ எதை வைத்து நிரப்பியிருக்கிறாய்?” என்று கேட்டார் ராஜா.

தந்தையே, பாருங்கள் மாளிகை நிரம்பித்தான் இருக்கிறது!” என்றான் மகன்.

ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. கோபம் வந்தது.
அவரைச் சமாதானப்படுத்தி குரு, கோபப்படாதே அரசே! உன் பிள்ளை அகல் விளக்குகளை ஏற்றியிருக்கிறான். மாளிகை முழுவதும் ஒளியால் நிறைந்திருக்கிறது பார்த்தாயா?’ என்றார்.

மன்னர் மனம் வெளிச்சமாயிற்று. அந்த மகனையே இளவரசனாக்கினார்.