தம்பதிகளே கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்

 தம்பதிகளே கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்


ஆனந்தவேதம் - தாம்பத்தியம் !!!

ராதேக்ருஷ்ணா தாம்பத்தியம் ஒரு வரப்ரசாதம் !

உலகின் மிக உயர்ந்த ஒரு தெய்வானுக்ரஹம்
தாம்பத்யம் ! பகவானும்,தாயாரும் கூட  திவ்ய தம்பதிகளாகவே
காட்சி தருகின்றனர் ! தாம்பத்தியத்தினால்தான் உலகில் சந்ததி உண்டாகிறது ! ப்ரும்மசரியத்தைக் காட்டிலும், வானப்ரஸ்தத்தைக் காட்டிலும், சன்யாசத்தைக் காட்டிலும், க்ருஹஸ்த தர்மமே மிக உயர்ந்தது ! தாம்பத்தியத்தில் தெய்வீகத்தை உணரவேண்டும் ! தாம்பத்தியத்தின் லக்ஷியம் பரமானந்தமே ! தாம்பத்தியத்தின் லக்ஷியம் தெய்வ தரிசனமே ! தாம்பத்தியத்தை நல்லபடி நடத்தினால் வீட்டிலேயே தெய்வத்தைப் பார்க்கலாம் . . .

அதற்கு என்ன செய்ய வேண்டும் ? ? ?
அதற்கு விரோதமானவை என்ன ? ? ?

 தம்பதிகளே கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள் . . . அவரவர் ப்ராரப்தத்திற்கு தகுந்தவாறே கணவனும், மனைவியும் அமைகின்றனர் ! ஆனால் உன்னதமான பக்தியினால் பூர்வ ஜன்ம கர்ம வினையை மாற்றி நிம்மதியான தாம்பத்தியத்தை அனுபவிக்க முடியும் !

எது எப்படியோ உனக்கென்று ஒரு வாழ்க்கையை பகவான் கொடுத்திருக்கிறான் ! அதை முதலில் புரிந்துகொள் !

உலகில் கல்யாணம் என்கின்ற ஒன்று நடக்காமல் பரிதவிப்பவர்கள் பலர் உண்டு !

கல்யாணம் ஆனபிறகும் தன் ஜோடியை இழந்து தவிப்பவர்கள்
பல கோடி உண்டு !

இருப்பதை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளவேண்டியது
மனித தர்மம் . . .

1. கணவனை மனைவி க்ருஷ்ணனின் ப்ரசாதமாக நினைக்க வேண்டும் ! மனைவியை கணவன் க்ருஷ்ணனின் ப்ரசாதமாக
ஏற்றுக்கொள்ள வேண்டும் !

2. கணவனிடத்தில் உள்ள உயர்ந்த குணங்களை மனைவி
புரிந்துகொள்ள வேண்டும் ! மனைவியிடத்தில் உள்ள உயர்ந்த
பண்புகளை கணவன் தெரிந்துகொள்ள வேண்டும் !

3. கணவனிடத்தில் உள்ள குறைகளை மனைவி தெரிந்துகொண்டு அதை மாற்ற விடா முயற்சி எடுக்கவேண்டும் ! மனைவியிடத்தில் உள்ள குறைகளை கணவன் புரிந்துகொண்டு அதிலிருந்து
அவளை மீட்கவேண்டும் !

4. கணவன் மனைவியை அடுத்தவர் முன் அவமானப்படுத்தவே கூடாது ! மனைவி கணவனைப்பற்றி அடுத்தவரிடம் மறந்தும்
கேவலமாகப் பேசவே கூடாது !

5. கணவன் குடும்பத்திற்கு வேண்டியதை சம்பாதித்துக் கொடுக்கவேண்டும் ! மனைவி கணவனின் சம்பாத்யத்திற்குத் தகுந்தபடி குடும்பத்தை நடத்தவேண்டும் !

6. கணவனை மனைவி ஆத்மாவாக பார்க்கவேண்டும் ! மனைவியை கணவன் ஆத்மாவாக உணரவேண்டும் !

7. கணவனின் தர்ம காரியங்களுக்கு மனைவி என்றுமே
உறுதுணையாக இருக்க வேண்டும் ! கணவன் என்றுமே
மனைவியை தர்மகாரியங்களில் ஈடுபடுத்தவேண்டும் !

8. எந்த ஒரு நிலைமையிலும், கணவன் மனைவியை அடிமையாக நினைக்கவே கூடாது ! எந்த ஒரு அவசரத்திலும், மனைவி கணவனை கேவலமாக நினைக்கவே கூடாது !

9. கணவனிடத்தில் மனைவி எப்பொழுதும் உண்மையாகவே
இருக்கவேண்டும் ! மனைவியிடத்தில் கணவன்
எப்பொழுதும் ஒழுங்காக நடந்துகொள்ளவேண்டும் !

10. கணவனின் பலம்,பலவீனம்,தேவை,  ஆகியவற்றை மனைவி
நன்றாக புரிந்துகொள்ளவேண்டும் ! மனைவியின் மனம்,தவிப்பு,தேவைகள் ஆகியவற்றிற்கு கணவன்
மரியாதை அளிக்கவேண்டும் !

11. மனைவியை கணவன் காமப்பொருளாக மட்டும் பார்க்காமல்
அவள் சரீரத்தின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து நடந்து கொள்ளவேண்டும் ! கணவனை மனைவி தன் ஆசைகளை பூர்த்தி செய்யும் ஒரு இயந்திரமாகப் பார்க்காமல், அவனுடன் தோள் கொடுத்து நிற்கவேண்டும் !

12. மனைவியின் முட்டாள்தனங்களையோ, குறைகளையோ,உடல் அழகைப்பற்றியோ, தவறுகளையோ, கணவன் மறந்தும்
அடுத்தவரிடம் வெளியிடக்கூடாது ! கணவனின் அசட்டுத்தனங்களையோ, நஷ்டங்களையோ,கெட்ட குணங்களையோ, மனைவி ஒரு நாளும் மற்றவரிடம்
கலந்து பேசவே கூடாது !

13. எந்த சமயத்திலும் கணவன் மனைவியை தள்ளி வைத்துவிடலாம்
என்று தீர்மானிக்கவே கூடாது ! மனைவி எந்த நிலைமையிலும்
கணவன் தனக்கு அவசியமில்லையென்றோ, விலகலாம் என்றோ யோசிக்கவே கூடாது !

14. ஒரு பொழுதுகூட மனைவி, இவனை கணவனாக அடைந்துவிட்டோமே என்று நினைக்கவே கூடாது ! ஒரு தடவை கூட,கணவன், இவளை விட நல்ல மனைவி கிடைத்திருந்தால்
நன்றாக இருந்திருக்கும் என்று யோசிக்கவே கூடாது !

15. என்றும் மனைவி அடுத்தவரின் கணவரோடு தன் கணவனை
ஒப்பிட்டு நினைக்கவே கூடாது ! என்றும் கணவன் மற்றவரின்
மனைவியை, தன் மனைவியோடு ஒப்பிட்டு பார்க்கவே கூடாது !

16. கணவனின் குடும்பத்தை மனைவி தன் குடும்பமாக
பாவித்து சேவை செய்யவேண்டும் ! மனைவியின் குடும்பத்தை
கணவன் தன்னுடையவர்களாகக் கருதி மரியாதையுடன் நடத்தவேண்டும் !

16. மனைவியின் உடல்நலத்தில் கணவன் என்றுமே அக்கரை உடையவனாக இருக்கவேண்டும் ! கணவனின் உடல்நலத்தில் மனைவி எப்பொழுதும் அக்கரையுடன் இருந்து கவனித்துக் கொள்ளவேண்டும் !

17. மனைவியானவள் கணவன் சொல்வதை
சரியாகப் புரிந்துகொண்டு, அதன்படி நடக்க வேண்டும்.
கணவனானவன் மனைவி சொல்லும் காரியங்களில் யோசனை செய்து, தகுந்தபடி செயல்படவேண்டும் .

18. மனைவி கணவனுக்கு ஒரு உத்தமமான மந்திரியைப் போல்
ஆலோசனை சொல்லவேண்டும் . கணவன் மனைவியை ஒரு தோழியாக, நலம் விரும்பியாக, குழந்தையாக பாவித்து
அவளுக்கு நல்லவற்றை சொல்லவேண்டும் !

19. என்றுமே மனைவி மலர்ச்சியான முகத்தோடு கணவனுக்கு பணிவிடை செய்யவேண்டும் ! என்றுமே கணவன் ஆனந்தமான
வார்த்தைகளால் மனைவிக்கு அன்பைத் தரவேண்டும் !

20. கணவன் மனைவியின் உடல் தேவைகளை புரிந்துகொண்டு
அதற்கேற்றபடி அவளுடன் கூடவேண்டும் ! மனைவி கணவனின் சுகத்திற்குத் தகுந்தபடி, தன்னை தயார் செய்துகொண்டு
ஆனந்தத்தைத் தர வேண்டும் !

21. கணவன், மனைவியின் குறைகளை பெரிதாக நினைக்காமல், அவளுடைய உத்தம குணங்களை அனுபவிக்கவேண்டும் !
மனைவி, கணவனின் குற்றங்களை பெரிதுபடுத்தாமல், அவனுடைய நல்ல பழக்கவழக்கங்களை கொண்டாடவேண்டும் !

22. கணவன் கோபப்படுகின்ற சமயத்தில் மனைவி, நிதானமாக இருக்க வேண்டும் ! மனைவிக்கு கோபம் வருகின்ற சமயத்தில்
கணவன் அவளை சாந்தப்படுத்தவேண்டும் !

23. கணவனின் தோல்விகளில் மனைவி தைரியம் தந்து,நம்பிக்கை தந்து, அவன் வெற்றியடைய உறுதுணையாக இருக்கவேண்டும் !
மனைவியின் அவமானங்களில் கணவன், அவளுக்கு சமாதானம் சொல்லி,அவளுடைய துக்கத்தை அழிக்கவேண்டும் !

24. கணவனின் சம்பாத்தியத்தில் குடும்பத்தை நடத்தி,அதே சமயத்தில் சொத்து சேர்க்கவும் மனைவி சிரத்தையுடன் இருக்கவேண்டும் ! மனைவியின் நியாயமான தேவைகளை
பூர்த்தி செய்து,ஆடம்பர செலவினங்களைக் கணவன் கட்டுப்படுத்தவேண்டும் !

25. கணவனின் அழகிலோ,குணத்திலோ, அறிவிலோ, மனைவி ஒரு நாளும் அகம்பாவம் கொள்ளவே கூடாது ! மனைவியின் அழகிலோ,புத்திசாதுர்யத்திலோ, நல்ல குணங்களிலோ, கணவன் எந்த ஒரு சமயத்திலும் கர்வப்படக்கூடாது !

இது போல் கோடி விஷயங்கள் சொல்ல ஆசை ! இன்னொரு சந்தர்ப்பத்தில் மீதியைச் சொல்லுவேன் ! இப்போதைக்கு முதலில்
இதில் சொன்னதை கடைபிடித்துப் பார் ! உன் தாம்பத்தியமும் சிறக்கும் ! முயற்சி செய்து பார் ! ! !