பகவத் கீதையில் கண்ணன் சொல்லும் குணங்கள் !

பகவத் கீதையில் கண்ணன் சொல்லும் குணங்கள் !

பகவத் கீதையில், ஞானிகளின் குணங்களை மூன்றே ஸ்லோகங்களில் கண்ணன் பட்டியல் போட்டுத் தந்து விடுகிறான். இதோ கிருஷ்ண பரமாத்மா
கொடுக்கும் பட்டியல்:

1.அச்சமின்மை (அபயம்)
2.மனத் தூய்மை (சத்வ சம்சுத்தி:)
3.ஞானத்திலும் யோகத்திலும் நிலைபெறுதல் (ஞான யோக வ்யவஸ்திதி)

4.தானம் (தேவையானோருக்கு பொருளுதவி)
5.ஐம்புலனடக்கம் (தம:)
6. வேள்வி செய்தல் (யஜ்ஞ:, இது ஞான வேள்வியாகவும் இருக்கலாம்)

7.சாத்திரங்களை ஓதுதல் (ஸ்வாத்யாய:, இது தேவாரம் திவ்வியப் பிரபந்தம் முதலியனவாகவும் இருக்கலாம்)
8.தவம் (தப:)
9.நேர்மை (ஆர்ஜவம்)
10. உயிர்களுக்கு மனம்,மொழி,மெய்யால் தீங்கு செய்யாமை (அஹிம்சை)

11.உண்மை (சத்யம்)
12.சினமின்மை (அக்ரோத:)
13.துறவு (த்யாகம்)
14.அமைதி (சாந்தி)
15.கோள் சொல்லாமை (அபைசுனம், No Gossip Policy)
16.உயிர்களிடத்தில் அன்பு (பூதேஷு தயா)
17.பிறர் பொருள் நயவாமை ( அலோலுப்த்வம்)
18.மிருதுதன்மை (மார்தவம், அடாவடிப்போக்கு இன்மை)
19.நாணம் (ஹ்ரீ:, தீய செயல்களுக்கும் தன்னைப் புகழ்வதற்கும் வெட்கம்)
20.மன உறுதி (அசாபலம்)
21.தைரியம், துணிவு (தேஜ:)
22. பிறர் குற்றம் பொறுத்தல் (க்ஷமா)
23. மனம் தளராமை, செயலில் பிடிப்பு (த்ருதி/ திட உறுதி)
24.சுத்தம் (சௌசம்)
25.வஞ்சனை இன்மை (அத்ரோஹ:)
26. செருக்கின்மை ( ந அதிமானிதா )
இந்த மூன்று ஸ்லோகங்களையும் மனப்பாடம் செய்வது நல்லது. நாள்தோறும் இறைவனிடம் இந்த 26 குணங்களையும் அருளும்படி பிரார்த்திக்கலாம். இதோ மூன்று ஸ்லோகங்கள்:
அபயம் ஸத்வஸம்சுத்திர் ஜ்ஞான யோக வ்யவஸ்திதி: தானம் தமச்ச யஜ்ஞச்ச ஸ்வாத்யாயஸ் தப ஆர்ஜவம். அஹிம்ஸா ஸத்யம க்ரோதஸ் த்யாக:
சாந்தி ரபைசுனம் தயா பூதேஷ் வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீ ரசாபலம். தேஜ: க்ஷமா த்ருதி: சௌச மத்ரோஹோ நாதிமானிதா பவந்தி ஸம்பதம் தைவீ மபிஜாதஸ்ய பாரத.