தெளிவோடு முயன்றால் முடியாதது எதுவுமில்லை!

தெளிவோடு முயன்றால் முடியாதது எதுவுமில்லை!

திருமூலர் மந்திர ரகசியம்
நிர்வாக மேலாண்மை, மன வளம், தாழ்வு நீக்கும் தன்னம்பிக்கை - என்றெல்லாம் இப்போது படபடக்கின்றன. பரபரக்கவும் செய்கின்றன.இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார்?
பெருக்கப் பிதற்றில் என்? பேய்த்தேர் நினைந்துஎன்?விரித்த பொருட்கு எல்லாம் வித்தாவது உள்ளம்பெருக்கில் பெருகும் சுருக்கில் சுருங்கும்அருத்தமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே.(திருமந்திரம்-2036)
கருத்து: அளவில்லாமல் பேசுவதில் என்ன பயன்? கானல் நீரைப் போலத் தோன்றி மறையும் இன்பங்களை நினைத்து என்ன பயன்? பலவாறாக விரிந்துள்ள பொருட்களுக்கு எல்லாம், விதை உள்ளத்தில் இருக்கிறது. உலகப் பொருட்களைப் பற்றி நினைக்க நினைக்க, அந்த எண்ணம் பெரிதாகும். அவற்றை நினையாமல் விட்டுவிட்டால், அந்த எண்ணம் சுருங்கி விடும். இதை ஆராய்ந்து தெளிவதே உண்மைப் பொருளாகும்.மனமே அனைத்திற்கும் காரணம்; மனமே அனைத்திற்கும் மூலப்பொருள்.
விருப்பு-வெறுப்புக்குக் கூடவா, மனம் காரணமாக அமைகிறது? ஆமாம்! ஓர் உதாரணம் - பேருந்தில் போய்க் கொண்டிருக்கிறோம். கூட்டம் அதிகமில்லையே தவிர, பலர் நின்று கொண்டிருக்கிறோம். யாரோ ஒருவர் நம்மீது சாய்ந்து கொண்டே இருக்கிறார். பொறுக்க முடியாமல் அந்த மனிதரை ஒரு காய்ச்சு காய்ச்சலாம் என்று கோபத்தோடு திரும்பிப் பார்த்தால், அவர் நமக்கு மிகவும் வேண்டியவர்! அதன் பிறகு கோபம் இருக்குமா என்ன? கோபம் போய், பாசம் வந்து விடாதா?
கோபம் கொள்ளத் தூண்டியதும் மனம்தான்; பிறகு பாசம் காட்டச் செய்ததும் அதே மனம்தான். ஆகையால் மனம்தான் அனைத்திற்கும் மூல காரணம். அந்த மனம் நம்மைப் பலவாறாகப் பேசச் சொல்லித் தூண்டுகிறது.
பேச்சு, பேச்சு, பேச்சுதான்! அதுவும் பலனில்லாத பேச்சு. குறிப்பாக, நமக்குக் கொஞ்சமாக எது தெரியுமோ, அதைப் பற்றி நிறையப் பேசுவோம். நமக்கு எல்லாம் தெரியும் என்பதை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வம், அவ்வாறு பேசச் செய்கிறது.அது மட்டுமா? ஆகாயத்தில் கோட்டை கட்டுகிறது மனம். கானல் நீரைப் பிடித்துக் குடிக்க விரும்பி ஓடும் மானைப் போல, கிடைக்காததையும் முடியாததையும் விரும்பி ஓடுகிறது மனம்.
‘கானல் நீர்’ என்பது நமக்குத் தெரிந்த வார்த்தைதான் என்றாலும், அதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் ‘பேய்த்தேர்’ என்று குறிப்பிடுகின்றன. பேய் பிடித்தவன் பல
வாறாக அலைவதைப் போல, மனம் பலவாறாக அலைவதைச் சொல்லும் சொல் அது.இப்படி, எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி எண்ணி ஏங்குவதில் என்ன பயன்?அடுத்தது, ஒன்றை அடைய வேண்டுமென்றால், அதைப் பற்றியே அழுத்தம் திருத்தமாக நினைத்து, பெரும் முயற்சி செய்தால் அதை அடைய முடியும்.
அதே போல, துயரங்களில் இருந்து விடுபட இறைவன் அருளை அடைய வேண்டுமானால், இறைவனைப் பற்றியே அழுத்தம் திருத்தமாக நினைத்து முயற்சி செய்தால், இறைவனின் அருளை அடைய முடியும். அதே சமயம், நாம் எதையாவது அடையப் பெரிதாக முயற்சி செய்யும்போது, நடுவில் வேறு ஏதாவது குறுக்கிட்டுவிடும். அவ்வளவு தான்! எடுத்த காரியத்தை அப்படியே விட்டு விடுவோம். நாளாக நாளாக, அந்த எண்ணமே மறைந்து போய் விடும்.
அடைய வேண்டியதை அழுத்தம் திருத்தமாக நினைக்கா விட்டால், முயற்சி வீணாவதோடு அந்த எண்ணமே மறந்து, மறைந்து போகும் என்கிறார் திருமூலர். ஆகையால், தெளிவு பெற்று செயல்பட்டால் ஒழிய நலம் பெற முடியாது; இறையருளை அடையவும் முடியாது என்கிறார்்.‘எதையாவது ஒண்ணச் செய்யும் போது, அது வேற மாதிரி ஆகிறது. ஏன் இப்படின்னு ஆராய்ச்சி செய்யறதுக்குள்ள, கூட இருக்கறவங்க ஓடிப் போய்டறாங்க. நான் மட்டும் தனியா இருக்க, செய்ய ஆரம்பிச்சது வேற மாதிரி முடியுதே! இதுக்கு என்ன செய்ய?’ என்று புலம்பல் வரலாம்.
வேறொரு விதமாக அதற்கும்
திருமூலர் பதில் சொல்கிறார்:
வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணிபூத்தது
தொழுது கொண்டோடினர் தோட்டத்துக்குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக்கனியே
(திருமந்திரம்-2869)
கருத்து: கத்தரி விதை ஊன்றிப் பயிரிட்டேன். ஆனால், அது பாகல் செடியாக முளைத்தது. வியப்பாக இருந்தது. புழுதியைத் தோண்டிப் பார்த்தேன். (மேலும் வியப்பாக) பூசணி பூத்தது. அதைப் பார்த்ததும் அதுவரை அத்தோட்டத்தில் இருந்த குடிமக்கள் ஓடி விட்டார்கள். (நான் மட்டும் இருந்தேன்) வாழைப்பழம் முழுமையாகப் பழுத்தது.
காயில் ஆரம்பித்துக் கனியில் முடியும் அபூர்வமான பாடல் இது. அதே சமயம், மிகவும் ஆழமான தத்துவத்தைக் கொண்ட, கடினமான பாடலும் இதுவே. முடிந்தவரை எளிமைபடுத்திப் பார்க்கலாம்.
கத்தரி - உள்ளத்தில் செய்யும் தவம்
பாகல் - வைராக்கியம்
புழுதி - தத்துவ ஆராய்ச்சி
பூசணி - சிவப் பரம்பொருள்
தோட்டத்துக் குடிகள் - ஐம்பொறிகள்
வாழைக்கனி - திருவடிப் பேறு.
இதன்படி, அகத்து அவலங்களை
நினைக்காமல், அகத்தவம் செய்தேன்.
அதாவது, உள்ளத்தில் தவம் செய்தேன். வைராக்கியம் பிறந்தது.
ஞான நூல்களில் சொன்னபடி, தத்துவ ஆராய்ச்சி செய்தேன்.
சிவப் பரம்பொருள் வெளிப்பட்டது.
அப்படி வெளிப்பட்டவுடன் ஐம்பொறிகளும் தங்கள் கொட்டம் அடங்கி, இறைவனை வழிபட்டன. திருவடிப் பேறான இன்பம் வாய்த்தது.
இதற்கு மேல், இப்பாடலுக்கு விளக்க உரை தேவையில்லை. 2, 3 தடவைகள் இதைப் படித்தால், நம் உள்ளத்தில் தானே மேலும் புதுப்புது விளக்கங்கள் தோன்றும்.
நல்லதையே நினை. வைராக்கியத்துடன் இரு. தெய்வத் தன்மை வெளிப்படும். ஆட்டிப் படைத்த ஐம்புலன்களும் நல்வழியில்
திரும்பும். திருவடிப் பேரின்பம் கிடைக்கும்.
இவ்வாறு சொன்ன திருமூலர், ஞானி ஒருவரின் இலக்கணத்தைப் பொதுப்படையான பாடலில் சொல்கிறார்.மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர் நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்குக் கெட்டவர் வாதனை தன்னால்
தனை மாற்றி ஆற்றத் தகுஞானி தானே.
(திருமந்திரம்-2612)
கருத்து: மனம், வாக்கு, காயம் (உடம்பு) ஆகியவற்றால், விரைவாக வினை வந்து பற்றிக் கொள்ளும். மனம்,வாக்கு ஆகியவை நல்வழியில் செயல்பட்டால், வினை
வந்து பற்றாது. மனதையும் வாக்கையும் தன்வசப்படுத்தியவர், தன்னை வினை வந்து பற்றாமல் மாற்றி அமைத்துக் கொள்ளும் ஞானியாவார்.கஷ்டப்படுவதற்கான காரணங்களைப் படிப்படியாக அடுக்குகிறது இப்பாடல்.
மனம், வாக்கு, காயம் (உடம்பு) எனும் மூன்றினாலும் (நாம் செய்யும் செயல்களால்) கஷ்டங்கள் வந்து கவ்விக் கொள்கின்றன.இம்மூன்றிலும் மனம் முதலிடம் பெற்றிருப்பதைக் கவனிக்க வேண்டும். நம் வினைகளுக்கும் துயரங்களுக்கும் மனம்தான் முதல் காரணம்.
கண்ணால் பார்த்தவற்றையும், காதால் கேட்டவற்றையும் அடைய வேண்டும், அதுவும் உடனடியாக அடைய வேண்டும் என ஆசைப்பட்டு, அதற்காகப் பலவிதங்களிலும் செயலாற்றத் தூண்டுகிறது மனம்.மனம் விரும்பியதை, வாய் வார்த்தைகளால் பேசி, எப்பாடுபட்டாவது தன் வசமாக்கிக் கொள்ள முயல்கிறது.மனம் விரும்பி, வாய் பேசி முடித்த பின் அப்புறம் என்ன?
உடம்பு பலவிதங்களிலும் பலவற்றையும் அனுபவிக்கிறது. அவற்றில் பெரும்பாலானவை. கெட்டவையாகவே இருக்கின்றன.இப்படி, மூன்று விதங்களிலும், வினைகளும் துயரங்களும் வந்து பற்றிக் கொள்கின்றன.சில சமயங்களில், நாம் செய்யும் நல்வினைகளின் மூலம் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கலாம். அதுவும், மனதைக் கவிழ்த்துக் குப்பையில் தள்ளி விடும்.
நல்லதாக ருசியாக, எங்கே எது கிடைத்தாலும் சரி, வாங்கி உள்ளே தள்ளி விடுவோம். அதுவும் அடுத்தவர் காசு என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு கட்டு கட்டி விடுவோம்!இப்படிக் கண்ட நேரத்தில், கண்டதை உண்பது தவறு; உணவு உணர்வைக் கெடுக்கும் என்பதெல்லாம் நினைவிற்கு வந்தாலும், அந்த நினைப்பை ஒதுக்கி விட்டு உண்போம்.
இது கூடப் பரவாயில்லை. வாயின் உள்ளே தள்ளுவதில் சற்றாவது பொறுப்புடன் இருக்கும் நாம், வாயில் இருந்து வெளியே தள்ளும் வார்த்தைகளில் சற்று கூடப் பொறுப்பாக இருக்க மாட்டோம்.‘‘ஏய்! அப்புறம் நான் ஏதாவது எக்குத் தப்பாப் பேசிடுவேன்.
வருத்தப்பட்டுப் பிரயோஜனம் இல்ல! நான் பொறுப்பில்ல!’’ என்று பெருமையாக வேறு பேசுவோம். அதன் பின் அமைதியா பொங்கி வழியும்?யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு- என வள்ளுவர் சொன்னது, உணவிற்கு மட்டுமல்ல; பேச்சிற்கும் சேர்த்துத்தான்.
வாய் எதையாவது பேசி, சிக்கலில் சிக்க வைத்து விடுகிறது.ஆனால், இந்த வாயைக்கூடக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். வாய்க்கு அடுத்ததாகச் சொல்லப்பட்ட உடம்பு இருக்கிறதே, என்னதான் மனது விரும்பினாலும், அதை நடவடிக்கையில் கொண்டு வந்து அனுபவிப்பது இந்த உடம்பு தான்.
மனது வெறும் சாட்சிப் பொருள் மட்டுமே!ஆரம்ப காலத்தில் மனம் சொன்னபடியெல்லாம் கேட்ட உடம்பு, நாளாக நாளாக, போகப் போக, மனதைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டு ஆட்டம் போட்டு அல்லல்களுக்கு அழைப்பு விடுக்கும்.
பாடலின் முதல் வரியில் மனம் - வாக்கு - காயம் எனும் மூன்றில், உடம்பையும் சேர்த்துச் சொன்ன திருமூலர், பாடலின் இரண்டாவது வரியில் மனம் - வாக்கு என இரண்டைச் சொன்னாரே தவிர, காயம் எனும் உடம்பைப் பற்றிச் சொல்லவே இல்லை.அதிகமாக அழுக்கு ஏறிய ஒரு துணியை, ஒரே சலவையில் தூய்மையாக்க முடியாதல்லவா?
அழுக்குத் துணியை, ஏராளமாக சோப்பு போட்டு, படார்-படார் என்று பலமாக அடித்துத் துவைத்தாலும், உடனே வெளுப்பாக ஆகாது. அத்துணியைத் தோய்க்கத் தோய்க்க, நாளடைவில்தான் அது தூய்மையாகும். அது போல, கெட்ட குணங்களில் படிந்திருக்கும் மனது, உடனே நல்வழியில் திரும்பி விடாது; மெல்ல மெல்லஅதை வழி திருப்ப வேண்டும்.
அப்படி, மனது நல்வழியில் திரும்பி விட்டால், அப்புறம் உடம்பு ஆட்டம் போடாது.இதை உணர்த்துவதற்காகவே, முதல் வரியில் உடம்பையும் சேர்த்துச் சொன்ன திருமூலர், அடுத்த வரியில் மனம் - வாக்கு என்ற இரண்டை மட்டுமே குறிப்பிட்டார்.இது நல்லது, இது கெட்டது என்பது கண்டிப்பாக மனதிற்குத் தெரியும். அதை நல்ல வழியில் போகப் பழக்கி விட்டால், அதன் பிறகு வாயும் நல்லதைத்தான் பேசும்; கெட்டதைப் பேசாது.இப்படிப் பக்குவப்பட்டவர்கள்தான் ஞானிகள் எனப் பாடலை முடிக்கிறார் திருமூலர்