கன்றுக்குட்டி டெக்னிக்!

கன்றுக்குட்டி டெக்னிக்!
ஒரு பண்ணையார் வீட்டிலிருந்து தாய்ப்பசு புல் மேயப் போயிருந்தது. கொஞ்ச நேரத்தில் கன்றுக்குட்டி தாயைத் தேடி கயிற்றை அறுத்துக்கொண்டு போய், பாதி வழியில் வழிதெரியாது அலறிக் கொண்டிருந்தது.
தேடிப்போன பண்ணையாரால், கன்றை வீட்டுக்கு கூட்டி வர முடியவில்லை. முரண்டு பண்ணியது. அடிக்க முடியாத பருவம்.
பண்ணை வேலையாளின் ஏழு வயது மகள் அவர் அவஸ்தையைப் பார்த்து சிரித்தாள். " நீங்க போங்க....நான் கூட்டியாறேன்" என்றாள். பண்ணையார் புறப்பட்டார். பின்னால் சிறுமி ....கன்றுகுட்டி சத்தம் போடாமல் வாலை ஆட்டிக்கொண்டு, சமர்த்தாக அவள் பின்னால் வந்தது. "நம்மால் முடியாததை ஏழு வயது படிப்பறிவற்ற சிறுமி எப்படி சாதிக்கிறாள்?" என்று பண்ணையார் திரும்பி பார்த்தார்.
தன சுட்டு விரல், நடு விரல் இரண்டையும் நீட்டி கன்றுக்குட்டியின் வாயில் திணித்திருந்தாள் சிறுமி. பால்பொழியும் தாயமடிக்காம்பு என்கிற நினைப்பில் குஷியாகக் கன்றுகுட்டி அவள் பின்னே ஓடிவந்தது.
மனத்தை வசப்படுத்த இந்தக் கன்றுக்குட்டி டெக்னிக் தான் நல்லது.
முன்பெல்லாம், தாமரைத்தண்டை உடைத்தால் வரும் மெல்லிய நூலில் திரிசெய்து விளக்கேற்றுவார்கள். அந்த நூலில் யானையைக் கட்ட முடியுமோ! முடியும். தாமரை நூலில் யானையை கட்டும் முயற்சியே மனசை அடக்கும் முயற்சி என்கின்றன யோகநூல்கள்.
நூறு முரடர்களை தூக்கியெறியும் முரடனை அவனது காதலியின் மெல்லிய தாமரைக்கைகள் கட்டுவது இல்லையா? காரணம்..... அவளது ஈர்ப்பு .... இவனது விழைவு. இப்படி மனசை அது லயிக்கும் நல்ல விஷயங்களில் கட்டுங்கள்.
விஸ்வாமித்திரர் கடும் தவம் செய்து மனத்தை அடக்கினார். மனம் அடங்கிற்றா? மேனகையை பார்த்ததும் காமம் கரை புரண்டது.
ஒரு வில்லின் நாணை எவ்வளவு அதிகமாக உங்கள் பக்கமாக இழுக்கிறீர்களோ அவ்வளவு வெளிப்பக்கம் அது அம்பைத் தள்ளும். அல்லது வில் முறிந்து போகும். அதுபோல் உங்கள் மனத்தை கடுமையாக அடக்கினால் அதற்கு எதிரான காரியங்களை தூண்டும்.
எனவே மனத்தை அடக்குவது வேறு. மனம் அடங்குவது வேறு. அடக்கினால் விளைவுகள் ஆபத்தானவை.. அடங்கினால் விளைவுகள் ஆனந்தமானவை.
மனத்த அடக்க வேண்டாம். அது அடங்க ஒத்துழைப்பு மட்டும் தாருங்கள்.
கம்ப ராமாயணத்தில் ஓர் அழகான இடம்.................
செத்து கிடந்த ராவணனை பார்த்து அழுகிற மண்டோதரி " ஐயா! இளமையில் நீ தவம் தவம் என்று காமத்தை அடக்கினாய். அதனால்தான் அந்த காமம் உன்னைப் பின்னாளில் பழிவாங்கிவிட்டது." என்று புலம்புகிறாள்.
எனவே எதையும் எதிர்த்து உங்கள் சக்தியைப் பிரயோகிக்க வேண்டாம். அடக்குமுறை, எதிர்மறை விளைவை நிச்சயம் ஏற்படுத்தும்.