பூஷன் முத்திரை

பூஷன் முத்திரை !!!
(இந்த முத்திரை பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொடுக்கிறது.)

கை விரல்கள் முத்திரை பயிற்சி மூலம், பிரபஞ்சத்திலிருந்து சக்தியை உடலுக்குள் செலுத்துகின்றன. கை விரல்களின் நுனிகள் ஒன்றோடொன்று தொடும்போது உடலுக்குள் அதற்குரிய நல்ல சக்தி செலுத்தப்பட்டு நாம் உடல் நோயிலிருந்தும் மன நோயிலிருந்தும் நிவாரணம் பெறுகிறோம். இன்றைய காலத்தில் முத்திரைப் பயிற்சிகள் ஒரு சில முத்திரைகள் தவிர மற்ற அனைத்து முத்திரைகளும் உட்கார்ந்துகொண்டு, நின்றுகொண்டு, படுத்துக்கொண்டு, நடந்துகொண்டு எந்த நேரத்திலும் செய்யலாம். முத்திரை பயிற்சியில் இருக்கும்போது நல்ல மூச்சுப்பயிற்சியும் இருப்பது நல்லது. உட்கார்ந்திருக்கும்போது நன்றாக நிமிர்ந்து உட்கார வேண்டும். படுத்திருக்கும்போது நேராக படுத்திருக்க வேண்டும். நாம் முத்திரைப் பயிற்சியை ஒழுங்காக முறைப்படி செய்துவந்தால் அதற்குரிய நோய்களிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். மருத்துவரிடமிருந்தும் மருந்துகளிடமிருந்தும் விடுதலை கிடைக்கும். முத்திரைப் பயிற்சிகள் அதிகம் இருந்தாலும் அதில் முத்தான முத்திரைகள் பற்றி பார்ப்போம். முத்திரைப் பயிற்சிகள் குறைந்தது 15 நிமிடங்களும் அதிகபட்சம் 45 நிமிடங்கள் வரை செய்யலாம், இங்கு 45 நிமிடங்கள் செய்தால் நோயிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும். சில முத்திரைப்பயிற்சிகளை அந்த நோய் நீங்கியவுடன் தொடர்ந்து அதற்குரிய முத்திரை பயிற்சி செய்வதை நிறுத்திவிடவேண்டும். நாம் இப்பொழுது ஒவ்வொரு முத்திரைகளாக பார்ப்போம்.

இன்று “பூஷன் முத்திரை” பற்றி பார்ப்போம்.
“பூஷன்” என்றால் “சூரியன்” என்று அர்த்தம். இந்த முத்திரை இரண்டு கைகளிலும் இரண்டு விதமாக செய்யவேண்டும்.
அதாவது வலது கையின் ஆள்காட்டி விரல், மற்றும் நடு விரலின் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக்கொள்ளவேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக வைத்துக்கொள்ளவேண்டும்.
இடது கையின் நடு விரல், மற்றும் மோதிர விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக்கொள்ளவேண்டும். மற்ற ஆள்காட்டி விரலும் சிறுவிரலும் நேராக வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம். சில நிமிடங்கள் செய்தாலே இது நல்ல பலன் கொடுக்கும். உணவு சாப்பிட்டபின் இந்த முத்திரை பயிற்சி செய்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

இந்த முத்திரை பயிற்சியால் நிலம் காற்று ஆகாயம் பஞ்சபூத சக்திகள் நமது உடலுக்கு அதிகம் கிடைக்கிறது. அதாவது ஒரு கையால் சக்தி பெறப்பட்டு மற்றொரு கையால் சக்தி உடலுக்கு
கொடுக்கப்படுகிறது.

பூஷன் முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
இந்த முத்திரை பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொடுக்கிறது.
உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.
உடல் உள் உறுப்புகளில் இருக்கும் நஞ்சு (TOXIN) என்று சொல்லப்படும் கெட்ட கழிவுகள் வெளியேறுகிறது.
காற்று சக்தி அதிகம் கிடைப்பதால் நாம் சுறுசுறுப்பாக இயங்கமுடியும்.
நிலத்தின் சக்தி அதிகம் கிடைப்பதால் நமது உடலின் எலும்பு மற்றும் தசைகள் நன்றாக சக்தியுடன் பலமடைகிறது.
நுரையீரல் நன்றாக வேலை செய்து ஆக்ஸிஜனை அதிகமாக பெற்றும் கார்பண்டையாக்ஸைடை முழுவதும் வெளியேற்றியும் நுரையீரல் அதிக சக்தி பெறுகிறது.
உடல் உறுப்புகள் வயிறு, கல்லீரல், மன்னீரல், பித்தப்பை சக்தி பெற்று நன்றாக வேலை செய்கிறது.
நரம்புகள் வலுவடைந்து நரம்பு தளர்ச்சி நீங்குகிறது.
குமட்டல் மற்றும் வாந்தியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் வாயுக்கோளாறுகளை நீக்குகிறது.
வயிறு மற்றும் குடல்கள் சக்தி பெற்று அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
சாப்பிட்டு அரை மணிநேரம் கழித்து இந்த முத்திரை பயிற்சி செய்தால் நமது உணவு நன்றாக ஜீரணமாகிறது.

நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.
நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.