அன்னதான மகிமையை விளக்கும் கதை

★அன்னதான மகிமையை விளக்கும் கதை★

★கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட - தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன். தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன். அவன் இறந்ததும் கண்ணனால் சுவர்க்கத்துக்கு அனுப்பப்பட்டவன்.

★அங்கு சென்று சகல வசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை. எப்பொழுதும் வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போனான். பிறகு சுவர்க்கத்தின தலைவனிடம் சென்று கேட்டான். நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் - எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை - எனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது எனக் கேட்டான்.

★தலைவனோ - கர்ணா நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும் தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்துச் சொல் - எப்போழுதாவது யாருக்காகவாது அன்ன தானம் செய்திருக்கிறாயா - எனக் கேட்டான்.

★கர்ணனுக்கு அன்ன தானம்  செய்ததாக நினைவு இல்லை. அன்ன தானம் செய்யாததால் தான் இப்பொழுது வயிற்றுப்பசி அடங்க வில்லை எனவும் கூறக் கேட்டான். அப்படியானால் இதற்கு என்ன தான் வழி எனக் கேட்ட போது - தலைவன் கூறினான் - உனது வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் - பசி அடங்கி விடும் என்றான்.

★கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. விரலைச் சப்பினால் பசி அடங்குமா - என்ன இது என ஐயப்பாடு இருந்தாலும் - வேறு வழி இல்லை என வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்து சப்ப - பசி உடனே அடங்கிற்று.

★ஒன்றும் புரியாத கர்ணன் - இது எப்படி மாய மந்திரம் எனக் கேட்க - தலைவன் கூறினான் - அன்பின் கர்ணா - நீ பூவுலகில் வாழும் போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்கு அன்னதானச் சத்திரம் இருக்கிறதென்று கேட்க - நீயும் உனது வலது கை ஆள்காட்டி விரலால் இதோ இப்பக்கம் செல்க என வழி காட்டினாய். அந்த புண்ணியச் செயல் - நற்செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது எனக் கூற -கர்ணனும் அன்ன தான மகிமையை உணர்ந்தான்.

★பதிவர்களே  நாமும் பிறந்த நாள்  திருமண நாள்  என்று கொண்டாடும் போதெல்லாம் முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள் அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள் வறியோர் இவர்களுக்கெல்லாம் அன்ன தானம் செய்தால் அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக்கும் மகிழ்ச்சியினையும் புண்ணியத்தைனையும் தரும் .

★வாருங்கள் அன்ன தானம்செய்வோம்★

★ஓம் நமசிவாய ஓம் ★