சைவநெறிக்கு எவையெவை புனித நூல்கள் என்று தெரியுமா?

சைவநெறிக்கு எவையெவை புனித நூல்கள் என்று தெரியுமா?

ஒன்றல்ல, இரண்டல்ல, பல உண்டு.சைவ சித்தாந்தம் முதனூல்களாக வேதங்களையும், சிறப்புநூல்களாக ஆகமங்களையும் கொண்டது. எனினும், இவை தவிர, தமிழ் -வடமொழிப் புராணங்களும், இதிகாசங்களும், பன்னிரு திருமுறைகளும், மெய்கண்ட சாத்திரங்களும் சைவத்துக்குரிய விசேட நூல்கள். இந்து சமயத்தின் ஏனைய கிளையினர் ஏற்றுப் போற்றும் பிரத்தானத்திரயங்கள் இவற்றுக்குப் புறம்பாக, சைவரினது மரியாதைக்குரியனவாகக் கூறப்படுகின்றன.

விவிலியத்தைப் படித்து, தாம் கிறித்துவர் என கிறித்துவர் பெருமையடையலாம். குரானைக் கற்றுவிட்டு, தாம் இசுலாமியர் என முசுலீம்கள் பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.

ஆனால், சைவநூல்கள் அனைத்தும் கற்றுத் தெளிந்தவர்கள் கூட, நான் ஒரு சித்தாந்தி என்றோ, நான் சமயத்தைக் கரைத்துக் குடித்தவன் என்றோ பெருமை பேசமுடியாது என்பதை அறிவீர்களா?? ஆம், அதுதான் உண்மை! ஏன்??

. வேதங்கள் -
இருக்கு, யசுர், சாமம், அதர்வம் எனும் நான்கு. இவற்றிலும், சிவனே முழுமுதல் எனச் சொல்லும் வேதப் பாகங்களே சைவர்களுக்கு முக்கியமானவை.

2 . ஆகமங்கள் -
ஆ = உயிர் +கமம் = நிறைவு. ஆன்மா, சிவத்துடன் ஒன்றி நிறைவுபெறுதலைக் குறிக்கும் தமிழ்ச்சொல். வடமொழி விதிப்படி, "தொன்றுதொட்டு வரும் அறிவு", "இறைவனை வந்தடையும் ஞானவழி" என்றெல்லாம் விளக்கம் கூறுவர். காமிகம் முதல் வாதுளம் ஈறாக, 28 சிவாகமங்களும், 207 உப ஆகமங்களும் உள்ளன. இவை சிவாலய அமைப்பு, விக்கிரகங்கள் அமைக்கும் முறை,கிரியை முறைகள், சித்தாந்தக் கருத்துக்கள் என்பவற்றை தம்வசம் கொண்டவை. இன்றைக்கு, பெரும்பாலும், காமிகாகமம், காரணாகமம் ஆகியனவே பயன்படுகின்றன.

3 . புராணங்கள் -
வடமொழியில் வியாசரால் அருளப்பட்ட பதினெண் புராணங்கள் உண்டு. இவற்றில், 10 சிவபுராணங்கள் ஆகும். தவிர, தமிழ் மரபில் இரு புராணங்கள் உண்டு. வடமொழி காந்தபுராணத்தின் சங்கரசங்கிதையின் மொழிபெயர்ப்பான கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணமும், அடியவர் பெருமை கூறும் பெரிய புராணமும், அவை.

4 . இதிகாசங்கள் -
இதி =இப்படி, காசம் =இருந்தது. முன்பு இப்படி இருந்தது என்று கூறும் பல படிப்பினைக் கதைகள் இணைந்த காவியங்கள். இராமாயணமும், மகா பாரதமும் நாம் நன்கறிந்த இதிகாசங்கள். இவற்றுடன், சைவர்க்குச் சிறப்பானது "சிவரகசியம்" எனும் இன்னொரு இதிகாசம்.

5 . திருமுறைகள் -
பன்னிரெண்டு. இவற்றை அருளியோர் இருபத்தெழுவர்.
1 ,2 ,3 திருமுறைகள் - திருக்கடைக்காப்பு எனப்படும் - சம்பந்தப்பெருமானால் அருளப்பட்டவை
4 , 5 , 6 திருமுறைகள் -தேவாரம் எனப்படும் - அப்பர்பெருமான் அருளியவை. (இத் தேவாரம் எனும் பெயரையே நாம் இவை அனைத்திற்கும் பொதுவாகச் சொல்கிறோம்.)
7ஆம் திருமுறை - திருப்பாட்டு எனப்படும் - சுந்தரர் அருளியது.
8ஆம் திருமுறை - திருவாசகமும் திருக்கோவையாரும் - மணிவாசகர் அருளியது.
9ஆம் திருமுறை - திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டும் - திருப்பல்லாண்டு அருளியவர் சேந்தனார், திருவிசைப்பா அருளியோர், அவருட்பட ஒன்பதின்மர்.
10ஆம் திருமுறை - திருமந்திரம் - திருமூலர் அருளியது
11ஆம் திருமுறை - 40 திருவருளிச்செயல்கள் - காரைக்காலம்மை, நம்பியாண்டார் நம்பி உட்பட பன்னிருவர் அருளியது.
12ஆம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) - சேக்கிழார் அருளியது

6. மெய்கண்ட சாத்திரங்கள் - சைவ சித்தாந்தத்துக்குரிய தத்துவ ஆராய்ச்சியை விளக்கும் 14 நூல்கள். இவற்றில் தலையானது மெய்கண்டார் இயற்றிய சிவஞானபோதம். அதன்பெருமை கருதியே இவை யாவும் மெய்கண்ட சாத்திரங்கள் எனப்பட்டன. (இது ஒரு மொழிபெயர்ப்பே என்பாரும் உண்டு.)
14இலும் உமாபதி சிவாச்சாரியார் அருளிய சித்தாந்த அட்டகம் எனும் எட்டு நூல்களும்,மெய்கண்டார், அருணந்தி சிவம், மனவாசகங்கடந்தார் ஆகியோரது நான்கு நூல்களும், இவற்றுக்கு முந்திய திருவியலூர், திருக்கடவூர் உய்யவந்தார்களது இருநூல்களும் அடங்கும்.

இவை பதினான்கும் தமிழில் அமைந்திருக்க, வடமொழியிலமைந்த எட்டு சைவசித்தாந்த நூல்களும் உண்டு. அவை "அட்டப்பிரகரணம்" எனப்படும்.

7. பிரத்தானத்திரயங்கள் - பகவத் கீதை, உபநிடதங்கள், பிரம சூத்திரம் எனும் மூன்றுமாம். இவை சைவரின் சிறப்புநூல்கள் அல்லவெனினும், சைவரால் மதிக்கப்படவேண்டியவை. இவற்றுக்கு சித்தாந்தமரபுக்கேற்ப, அரதத்த சிவாச்சாரியாரும் நீலகண்ட சிவாச்சாரியாரும் பாடியம் (உரை) எழுதியுள்ளனர்.

வேதாந்தமான (அந்தம் - முடிவு - வேதத்தின் இறுதிப் பாகம்.) உபநிடதங்கள் 108 உண்டு. இவை, நான்கு வேதங்களுக்கும் இத்தனை இத்தனை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 14 உபநிடதங்கள் சிவனே பரம்பொருள் என்கின்றன.
இருக்கு வேதத்தின் - அட்சமாலை உபநிடதம்
யசுரின் - காலாக்கினி உருத்திர, கைவல்லிய, தட்சிணாமூர்த்தி, பஞ்சப்பிரம, உருத்திரவிருதய உபநிடதங்கள்
சாமத்தின் - சாபாலி, உருத்திராட்சசாபால உபநிடதங்கள்
அதர்வத்தின் - அதர்வசிக, அதர்வசிர, கணபதி, பிருகச்சாபால, பசுமசாபால, சரப உபநிடதங்கள்
ஆக, 14.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பது தமிழிலுள்ள ஒரு பழமொழி. வெறும் நூலறிவோ, அவற்றின் பயிற்சியோ நமக்கு நம் சமயநோக்கை நிறைவேற்றிவைக்கமுடியாது. மாற்றுமதத்தவரின் புனித நூல்கள் போல, வெறுமனே இறைவனை நம்பு என்று கூறிச் செல்லும் நூல்களா இவை? அப்படிக் கூறவேண்டுமானால் இவற்றில் ஏதாவது ஒன்றே போதுமே, அதைப் புரியவைப்பதற்கு!

அகவிசாரணை மூலம், ஆன்மா பற்றி அறிந்துகொண்டு, சிவத்துடன் இரண்டறக் கலத்தலே நம் சமயநோக்கு. அதற்கு வெறும் பொத்தக அறிவன்றி, இன்னொன்று தேவை!

ஆம், அது குருவருள்!
நமக்குப் பொருத்தமான குரு ஒருவர் அமைந்தாலேயே, ஆன்ம விடுதலை நமக்கு சித்திக்கும். மணிவாசகர் போன்ற அடியார்களுக்கு, சிவனே குருவடிவில் வந்து திருவருள் புரிந்ததை நாம் அறிந்திருப்போம்.

நமது பக்கத்தில் பதியப்படும் பல விதயங்களே உங்களுக்குப் புரிந்துகொள்ளக் கடினமாயிருந்திருக்கும். அப்படியிருக்க, அவற்றை "ஐயந்திரிபற தெளிதல்" என்பது சாதாரண விதயமா என்ன? சித்தாந்தம் மட்டுமல்ல, சுமார்த்தம், துவிதம், விசிட்டாத்துவிதம் முதலான எந்த இந்துத் தத்துவத்தை எடுத்துக் கொண்டாலும், குருவருள் இன்றி, நாம் வீடுபேறு அடையமுடியாது.

தவிர, தத்துவவியலில் பயன்படும் சில கலைச்சொற்கள், புரிந்துகொள்ளக் கடினமானவை. மறைபொருள் கொண்டவை. அதை, குரு ஒருவரே மிகத் தெளிவாக எடுத்துரைக்கமுடியும். (சில சித்தாந்தக் கருத்துக்களை, வெளிப்படையாக நம் பக்கத்தில், பகிர்ந்துகொள்ள நாம் தயங்குவதும் இதனாற்றான்!:)

ஒரு சைவனின் இறுதி இலட்சியமே, சிவத்துடன் இரண்டறக்கலந்து, வீடுபேறு அடைதல் என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஆனால், என்ன செய்வது? நாம் தான் பாசங்களிலும் ஆசைகளிலும் சிக்குண்டு தயங்குகிறோமே! முக்தியடைதல், இறைவனை நாடுதல் என்றால், காட்டுக்குச் சென்று தவமிருக்கவேணுமோ, குடும்பம், பிள்ளை - குட்டிகளை விட்டு விலகிச் செல்லவேண்டுமோ, என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றும்.

"இறைவனை நாடுதல்" என்பதை நாம் இப்படித் தான் துறவறம் சார்ந்ததாக சித்தரித்து வைத்திருக்கிறோம்.

இது முழுக்க முழுக்கத் தவறு. உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டே, இறைதேடலில் தாராளமாக ஈடுபடலாம்.

அதற்கும் தடைவிதிக்கவில்லை நம் நெறி. உனக்கு உரிய பக்குவம் கிடைக்கும் வரை, உலக வாழ்க்கையை நன்கு அனுபவி. ஆனால், முக்கியமாக, அதன்போதும் இறைவனை மறந்துவிடாதே என்கிறது.

நாயன்மார் புரிந்த அற்புதங்களில் பெரும்பாலானவை. (பொற்காசு பெறுதல், செங்கட்டிகளைப் பொன்கட்டிகளாக்குதல், மனைவியிடம் இறைவனைத் தூதனுப்புதல், நெல்லை வீட்டுக்குக் கொணர்தல் இவை.) உலகியல் சார்ந்தவை தான். அதற்காக அவர்களின் கோரிக்கைகளையெல்லாம் மறுத்தொதுக்கவில்லை இறைவன்.

அதனாற்றான் சொல்கிறோம். தாராளமாக ஆன்மிகத்தில் நீங்கள் ஈடுபடுங்கள். உலக வாழ்க்கையில், மேலும் மேலும் விரிவான அறிவையும், நிரந்தர மகிழ்ச்சியையும் வழங்குமேஅன்றி, உலகியல் வாழ்க்கைக்கு ஆன்மிகம் எந்த விதத்திலும் தடையாக இராது.

இன்னும் சிலருக்கு, சைவ நூல்களைப் படிக்கவேண்டுமென்றோ, குரு அமையவேண்டுமென்றோ கூட, எவ்வித அவசியமும் இல்லை. அவரவர் கன்ம விதிப்படி, இதொன்றும் இல்லாமலே, அவர்களுக்குத் திருவருள் புரிவான் ஈசன். இலிங்கத்துக்குக் கல்லெறிந்தே சிவனருள் பெற்ற சாக்கிய நாயனார், தாழ்குடிகளைச் சேர்ந்தவர்களாக சமுகத்தில் ஒதுக்கிவைக்கப்பட்டும்,மிக இலகுவாக சிவனருள் கைகூடி, சிவசாயுச்சியப்பதவி பெற்ற, நந்தனார் முதலான நாயன்மார்களின் வரலாறுகள் இதைத் தான் எமக்கு சொல்லித்தருகின்றன.

இறைவன் திருவுளம் வைத்தால், எந்தவொரு அடியவனும் முத்திப்பேறு அடையலாம். அதற்கு குருவருளோ, சமய நூல்களோ இன்றியமையாதவை அல்ல.

இக்காரணம் பற்றியே, சமயநூல்களைக் கட்டாயம் கற்கவேண்டுமென்றோ, குருவைத் தேடி் வாருங்கள் என்றோ சமயப் பெரியார்கள் நம்மை வற்புறுத்தவில்லை. ஆனால், அது இன்று மிகப்பெரிய ஆபத்தில் நம்மைச் சிக்கவைத்திருக்க்கிறது!

சமயம் பற்றி ஒரு விழுக்காடு கூட அறியாத இளந்தலைமுறையு உருவாகிக் கொண்டிருப்பதையும், அதைச் சுட்டிக் காட்டி, கேள்வியெழுப்பி கேலிசெய்து, அவர்களைக் குழப்பிவிட்டு, வேற்றுமதங்களுக்கு மதமாற்றவும், இறைநம்பிக்கை அற்றவர்களாக மாற்றவும் ஒரு கூட்டமே காத்திருக்கிறது என்பதும் நாம் அறியாத ஒன்றல்ல!

அதனால், சமகாலத்தில் சமயநூல்களில் அதிக பயிற்சி பெறுவதும், மற்றவர்களைப் பெறத் தூண்டுவதும் அத்தியாவசியமாக இருக்கிறது. வடமொழி நூல்களை வாசிக்கும் வசதி இல்லாவிட்டாலும், சைவ சித்தாந்தம் தொடர்பான எத்தனையோ நூல்கள் தமிழிலும் கிடைக்கின்றன. இன்றைய இயந்திர உலகில், நேரம் கிடைப்பது கொஞ்சம் கடினம்தான் எனினும், இயன்றவரை, ஒருநாளில் அரைமணிநேரமாவது இதற்கென ஒதுக்கி, சில சமய நூல்களையாவது கற்றுக்கொள்ளுங்கள். ஆன்மிகத்தில் மேனிலை அடைய விரும்பினால், அருகிலுள்ள ஏதாவது "நல்ல" ஆதினங்களுக்கு அடிக்கடி சென்று வாருங்கள்.

வயதைக் காட்டி, குழந்தைகளுக்குக் கூட தடை போடாமல், சமய நூல்களை அவர்கள் கற்கவேண்டுமென ஊக்குவியுங்கள். நீங்களும் அதற்கு முன்மாதிரியாக விளங்குங்கள்.

திருமுறைகளிலிருந்து சில பதிகங்களையாவது மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். அவற்றை மீண்டும் மீண்டும் மனமுருகிப் பாடிவரும் போது, உங்களில் ஏற்படும் மாற்றம் விரைவிலேயே உங்களுக்கும் புரியத்தொடங்கும்.